இன்று ( 30-11-2021) பாராளுமன்றில் சுகாதாரத் துறை மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும் போதனா வைத்தியசாலையிலும் ஏனைய வடக்கு மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளிலும் உள்ள ஆளணி பற்றாக்குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தினார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு.
‘இந்த நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சூழ்நிலையில் தம்மை அர்ப்பணித்து அளப்பரிய சேவையாற்றும் வைத்தியதுறை சார்ந்தவர்களிற்கும் சுகாதார துறை சார்ந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எமது நன்றிகளையும் மரியாதையும் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டு, குறைந்த வசதிகளுக்கு மத்தியிலும் மிகச்சிறப்பான பணியை மேற்கொண்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் வைத்தியர்கள். மற்றும் அனைத்து சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த அனைவருக்கும் தலைசாய்த்து. எனது பெருமதிப்பையிம் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த இடத்தில் வடக்கு மாகண சுகாதார துறை குறித்த சில விடயங்களை சுகாதார அமைச்சரின் கவனத்துக்குகொண்டுவர விரும்புகிறேன்.
வடக்கு மாகாணத்துக்கு மட்டுமல்லாது இ வடக்கு மாகாணத்திற்கு வெளியே வசிக்கும் மக்களுக்கும் மிகமுக்கியமான உயர்நிலை வைத்தியசாலையாக விளங்கும் யாழ் போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்புவசதிகள் மற்றும் அங்கு நிலவிகின்ற குறைபாடுகள் உடனடியாக கருத்திலெடுக்கப்பட்டு ஆவன செய்யப்படவேண்டியது அவசியமானதாகும். ஆனால் துரதிர்ஷவசமாக இத்தகைய உயர்நிலை வைத்தியசாலையான யாழ் போதனா வைத்தியசாலை தொடர்ந்தும் பல்வேறு வள மற்றும் ஆளணி பாற்றாக்குறைகளுடனேயே தொடர்ந்தும் இயங்கிவருகிறது.
அவற்றில் சிலவற்றை இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
முக்கியமாக, யாழ் போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதிக்கென உரிய நிரந்த கட்டடம் இன்னமும் இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய மிக முக்கியமான விடயமாகும். மிக பழைமையான பழுதடைந்த நிலையில் இருந்த யாழ் போதனாவைத்தியசாலையின் மகபேற்று விடுதியானது 2013 இல் இடிக்கப்பட்டிருந்தது. அந்த மகப்பேற்று விடுதி இன்னமும் கட்டப்படாது, உரிய மகப்பேற்று விடுதி வசதியின்றியே தற்காலிக விடுதி வசதியுடன் யாழ் போதானவைத்திய சாலை இன்னமும் இயங்கிவருகிறது. இதனால், ஏறத்தாழ 50 வீதமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உரிய கட்டில் வசதியின்றி நிலத்தில் வைத்தே வைத்தியம் செய்யப்படவேண்டிய கவலைக்குரிய, ஆபத்தான நிலையில் போதனா வைத்தியசாலை இருக்கிறது. ஒரு போதானா வைத்தியசாலை என்கிற வகையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். எனவே புதிய மகப்பேற்று விடுதி அமைப்பது குறித்து சுகாதார துறை அமைச்சர் காலதமாதமின்றி உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்து, தாதிய உத்தியோகத்ததர்கள் குறித்து எனது கரிசனையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வைத்தியநிபுணர்கள், வைத்தியர்கள் போலவே, தாதிய உத்தியோகத்தர்களுடைய பணியும் மிக முக்கியமானது. யாழ் போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்களுக்கான அனுமதியளிக்கப்பட்ட ஆளணி 657 ஆகும். ஆனால்இ இந்த ஆளணியில் 573 பேர் மட்டுமே உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த 573 தாதிய உத்தியோகத்தர்களுள், எந்த ஒரு காலாப்பகுதியினை எடுத்தாலும் இயல்பாகவே ஏறத்தாழ 50 பேர் வரை பணி விடுப்பில் (leave) இருப்பார்கள். 78 பேர் வரையான தாதிய உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்று இடம் மாறுதலுக்காக காத்திருக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவற்றை தவிர்த்து பார்த்தால் கூட, ஆளணி மீள் மதிப்பீடு செய்யப்படாது, மிக பழைய குடிசன மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆளணியை எடுத்துக்கொண்டால் கூட யாழ் போதனா வைத்தியசாலையில் இன்னமும் 134 தாதிய உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம், உடனடியாக நிரப்பப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.
இங்கு 657 தாதிய உத்தியோகத்தர்களுக்கான ஆளணியே தற்போது அனுபதிக்கபப்ட்டுள்ளது. ஆனால் தற்போதைய சனத்தொகைக்கும் தாதிய உத்தியோகத்தர்களுக்குமான விகிதாசாரத்தை எடுத்துப்பார்த்தால் உண்மையில் 1200 க்கு அதிகமான தாதிய உத்தியோகத்தர்களுக்கான ஆளணி இங்கு தேவைப்படுகிறார்கள். இந்நிலையில் உடனடியாக, போதனாவைத்தியசாலையின் சேவை வழங்கலின் முன்னேற்றத்துக்காக, தாதிய ஆளணியை உடனடியாக மீள் கணிப்பீடு செய்து ஆகக்குறைந்தது, இன்னொரு 300 பேருக்கான ஆளணியையாவது உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதார அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
வைத்தியர்களை பொறுத்தவரை 300 வைத்தியர்களுக்கும் 72 வைத்திய நிபுணர்களுக்குமான ஆளணியே யாழ் போதனா வைத்தியசாலையிற்கு அனுமதிக்க்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் 175 வைத்தியர்களும் 63 வைத்திய நிபுணர்களுமே இங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கனம் அமைச்சர் அவர்களே!
இது குறித்தும் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன். இப்போது நிலவும் கடின சூழ்நிலையை உணர்ந்து கொண்டதால், யாழ் போதனா வைத்தியசாலை மட்டுமல்ல வடக்கின் அநேக வைத்தசாலைகள், தமக்கான தேவைகளை முன்வைத்து போராடுது குறைவு. உண்மையில் மேலே நான் குறிப்பிட்ட இந்த தரவுகளை கூட நாம் இலகுவாக பெற்றிருக்கவில்லை.
இன்றைய சூழலில், வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் சுகாதார சிற்றூழியர்களுக்கு ஏறத்தாழ 73% வீதம் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் வடக்கு மாகாண சுகாதரதுறையையில், கடந்த யுத்தகாலத்தில் ஏறத்தாழ 900 சுகாதார தொண்டர்கள் அளப்பெரும் பணியாற்றி இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் எவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படாது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்னார்கள். இப்படியாக சுகாதாரத்துறை சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்ற இந்த காலப்பகுதியில் ஒதுக்கிவைக்கப்பட்ட அந்த 900 சுகாதார சேவை தொண்டர்களை இலகுவாக உள்ளீர்க்க முடியும். அவர்களுக்கான கல்வித்தகமைகள் என எந்தவொரு தடைகளும் இல்லாத நிலையில் அவர்களை இலகுவாக உள்ளீர்க்க முடியும்.
மேற்படி சுகாதாரத் தொண்டர்கள், தம்மை சுகாதாரத்துறையில் நிரந்தரமாக உள்ளீர்க்குமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திவருகிறார்கள். அண்மையில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே யாழ்ப்பாணம் வந்திருந்த போதும் இது குறித்து அவரின் கவனத்துக்கு நாம் கொண்டுவந்திருந்தோம். அதை தொடர்ந்து அவர் இப்பிரச்சினையை தான் அமைச்சரைவையில் சமர்ப்பித்து அதற்கான அமைச்சரவை பத்திரமும் பெறப்பட்டதாக மகிந்தானந்த அளுத்கமகே என்னிடம் தெரிவித்து இருந்தார். ஆனால், அமைச்சரவை பத்திரம் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் இது குறித்து எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்டவில்லை. அதனால் அத்தொண்டர்கள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சுகாதார சிற்றூழியர்களுக்கான ஆளணியில் 73% பற்றாக்குறை நிலவுகின்ற இன்றையநிலமையில்இஅந்த 900 தொண்டர்களிற்கு நிரந்தர பணியுரிமை வழங்குவதில் எந்தவொரு காலதாமதமும் இருக்கதேவையில்லை என்பதை இந்த அவையில் வலியுறுத்த விரும்புகின்றேன்.
வடக்கு மாகாண சுகாதார நிர்வாகத்தின் கீழ் வருகின்ற 117 வைத்தியசாலைகளில் 15 வைத்தியசாலைகளிற்கு வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இந்த 117 வைத்தியசாலைகளில் ஆக மொத்தம் 41 வைத்தியசாலைகளிற்கு மட்டுமே தாதிய உத்தியோகத்தர்களுக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருக்கிறது ஏனைய 76 வைத்தியசாலைகளுக்கு தாதிய ஆளணியே அனுமதிக்கப்படவில்லை. இது தவிர இன்னொரு முக்கியமான விடயமாக, மாகாணசாபைகளின் கீழ் இயங்கி வந்த பல வைத்தியசாலைகள், மீண்டும் மத்திய அரசின் கீழ் உள்ளீர்க்கபட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நான் அறிந்தவகையில், வடமாகாணத்தை சேர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலையும் மத்திய அரசின் கீழ் உள்ளீர்க்கப்பட இருக்கிறது.
மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வைத்தியசாலைகளை விட, மத்திய அரசின் கீழ் இருக்கும் வைத்தியசாலைகளுக்கு பலமடங்கு அதிகமான நிதி மற்றும் பல ஒதுக்கீடு காணப்படுவதால், வைத்தியர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் அந்த வைத்தியசாலைகள் மத்திய அரசால் உள்ளீர்க்கபப்டுவதை விரும்பகூடும். ஆனால், இப்படியாக மத்திய மாகாண வைத்தியசாலைகளுக்கு இடையிலான வளப்பங்கீட்டில் இப்படியான பாரிய பாகுபாட்டை காட்டுவது உண்மையில் ஒரு மிகப்பெரிய அநீதியாகும். இப்படியாக மத்திய, மாகாண சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறைகளுக்கிடையில் வளப்பங்கீட்டில் பாகுபாட்டை காட்டும்போது மக்கள் மத்திய அரசின் கீழ் இருப்பதன் மூலம் அதிக நிதி மற்றும் வள ஒதுக்கீட்டைபெறவிளைவது புரிந்துகொள்ளக்கூடியதே.
இப்படியான நிதி மற்றும் வள பாகுபாட்டுக்கு மத்தியிலும் வடமாகாண வைத்தியசாலைகள் மிகச் சிறப்பானபணியை ஆற்றிவருகின்றது.
அவ்வாறு சிறப்பாக செயற்படுவதால் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளையும் தெல்லிப்பளை வைத்தியசாலையையும் மத்திய அரசு தன் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளீர்க்க முயல்கிறது.
மத்திய அரசின் கீழ் வருகின்ற யாழ் போதனா வைத்தியசாலையில் கூட மிகுந்த ஆளணி மற்றும் வளபற்றாக்குறை நிலவுகின்றமையே யதார்த்தம் என்பதால், வெறுமனே மத்திய அரசின் கீழ் வைத்தியசாலையை உள்ளீர்ப்பதனை விடவும் மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் வ்ருகின்ற வைத்தியசாலையாக இருந்தால் கூட அவற்றிற்கான ஒதுக்கிடுகளை போதுமான அளவில் செய்து உரிய அனுமதிகளை அளித்து மாகாணசபை நிர்வாகம், அந்த வைத்தியசாலைகளை திறம்பட கொண்டு நடத்த வழிவகை செய்வதே உண்மையில் நீண்டகால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
இதன்போது குறுக்கிட்ட சுகாதார அமைச்சர் ‘மத்திய அரசின் கீழ் வைத்தியசாலைகளை உள்ளீர்ப்பது குறித்த தீர்மானம் மத்திய சுகாதார அமைச்சிற்குரியது அல்ல, அம்மாகாண ஆளுநரும் மாகாணசபையுமே அந்த முடிவிற்கு பொறுப்பானவை எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், உதாரணத்துக்கு தெல்லிப்பழை ஆதாரா வைத்தியசாலையை எடுத்துக்கொண்டால், அங்கு பணியாற்றும் வைத்தியர்களும் அப்பிரதேச மக்களும், மாகாணசபை வைத்யியசாலைகளுக்கான வளப்பங்கீட்டில் மிகப்பாரிய பாகுபாடு இருப்பதனால், தமது வைத்தியசாலை மத்திய அரசின் கீழா உள்ளீர்க்கபடுவதையே நோக்கியே இயல்பாக விரும்பவேண்டிய நிலைக்குதள்ளப்படுகிறார்கள். அதனால் ஆளுநருக்கும் அந்த அழுத்தம் வழங்கப்படுகிறது. ஆதலால் நான் கோருவது என்னவெனில், இப்படியாக மாகாண வைத்தியசாலைகளுக்கான வளப்பங்கீட்டில் பாகுபாட்டை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை மத்திய அரசை நோக்கி போவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதை விடுத்து, அவர்களுக்கான உரிய ஒதுக்கீடுகளை செய்து மாகாணசபை அந்த வைத்தியசாலைகளை நிர்வகிக்க வசதி செய்து கொடுக்கவேண்டும்.
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையை அடுத்து உடனடியாகாவே பதிலளித்த சுகாதார அமைச்சர் இந்த கோரிக்கைகளை உடனடியாக கவனத்தில் எடுப்பதாகவும், பேச்சி ல் வலியுறுத்திய கோரிக்கைகளை தன்னிடம் கையளிக்குமாறும் இது குறித்து நிதி அமைச்சர் மாகாண அமைச்சர் இணைந்து கவனிக்க வேண்டும் எனவும் சபையில் தெரிவித்தார்.